செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாகவும், முறையான சாட்சியங்களை பரிசீலனை செய்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளை இன்று (19) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது செம்மணி அகழ்வுப் பணிகளுக்கு சர்வதேச நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர்:
“இலங்கையில் உள்ள குற்றவியல் சட்டமே இதற்கப் போதுமானது. சந்தேகநபர்களைக் கைது செய்து, சாட்சியங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு உள்நாட்டுச் சட்டங்கள் போதுமானதாகவே உள்ளன.
ஆனால், இந்த விசாரணைகள் இன்னும் அந்தளவிற்கு முன்னோக்கி நகர்த்தப்படவில்லை. தற்சமயம் அகழ்வு மட்டத்திலேயே காணப்படுகின்றன. எதிர்காலத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனை வழங்குவதற்கு நாட்டில் உள்ள சட்டத்தின்படி நாம் செயற்படுவோம்.”
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை மூடினால், இலங்கையில் இந்த விசாரணைகளை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய வழி இல்லாமல் போய்விடும். எனவே, அந்த அலுவலகத்தை மூடுவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. அதில் பணியாற்றுவோர் மோசடியாகச் செயற்பட்டார்கள் அல்லது குற்றமிழைத்தார்கள் என்பதை நிரூபித்தால், அது குறித்துப் பரிசீலிக்கலாம்.
கடந்த அரசாங்கங்கள் இந்த விவகாரத்தை உரிய முறையில் கையாளவில்லை. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், இதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, தேவையான ஆட்சேர்ப்புகளையும் செய்து, பணிகளை உரிய முறையில் முன்னோக்கி நகர்த்தி வருகின்றோம்.
எனவே, கடந்த காலச் செயற்பாடுகளை வைத்து எங்களைக் கணிக்க வேண்டாம். எமது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடுகளைக் கவனித்து, அவை சரியா அல்லது பிழையா எனக் கூறுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.




