போகவந்தலாவையில் சம்பார் மானை கொன்று இறைச்சி விற்றதாக இருவர் கைது
போகவந்தலாவை சாப்ட்லன் தோட்டப் பகுதியில் சுற்றித்திரிந்த சம்பார் மானை கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்கள் இன்று (15) போகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாப்ட்லன் தோட்டத்தின் N.C. பிரிவில் சம்பார் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைக்காக விநியோகித்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போகவந்தலாவை நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அதே தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வேளையில், விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் சுமார் 10 கிலோகிராம் சம்பார் மான் இறைச்சி அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது. மேலும், இறைச்சியின் ஒரு பகுதி ஏற்கனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போகவந்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நுவன் மதுசங்கவின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




