மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கீழ் உணவகம் ஒன்றின் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் தொடரப்பட்ட வழக்கில் உணவகத்தின் முகாமையாளரை எதிர்வரும் 26 ம் திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை (22) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
நகரின் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அருகாமையிலுள்ள குறித்த உணவகத்தில் சம்பவ தினமான நேற்று வெள்ளிக்கிழமை தயாரித்து வழங்கிய உணவு மனித பாவனைக்கு உதவாதது உணவு விற்பனை செய்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தவகல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த உணவகத்தை முற்றுகையிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் அங்கிருந்து பழுதடைந்த உணவுப் பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்டிருந்த பழுதடைந்த உணவுகளை மீட்டதுடன் உணவகத்தின் முகாமையாளரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது உணவக முகாமையாளர் குற்றத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் குறித்த உணவகத்திற்கு எதிராக இதுவரை 2 முன்குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளதாக நீதவானின் கவனத்திற்கு பொது சுகாதார உத்தியோகத்தர் கொண்டு வந்ததையடுத்து அவரை எதிர்வரும் 26 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
-கனகராஜா சரவணன்-



