நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வன்முறை மோதலின்போது சிறைச்சாலை வளாகத்தில் கடுமையான கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டதையடுத்து, அவசர பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெண் கைதிகள் 166 பேரும் வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நீர்கொழும்பு சிறைச்சாலையில் அவசர புனரமைப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்காக அவர்கள் வாரியபொல, போகம்பர, அங்குணகொலபெலஸ்ஸ மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.




