தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித் துறையும், ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப் பணித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் விஜய்யின் வசம் பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், காவல் உள்ளிட்ட துறைகள் உள்ளன.
மேலும், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளும் முதல்வர் விஜய் வசமே உள்ளன.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு மிக முக்கியமான நிதித்துறை மற்றும் ஓய்வூதியத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன் சுமை மற்றும் நீர்ப்பாசனம், நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்டவை உள்ளன.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அருண் ராஜுக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வெங்கட் ரமணனுக்கு உணவு, பொது விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டப்பேரவை, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் அச்சுத்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம் உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர் டி.கே.பிரபுவுக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.



