திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் சாரதி மெதுவாக சென்றதாகவும் இதனால் பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்ற முடியாது போனதாகவும் பௌத்த பிக்கு ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 19ம் திகதி மஹதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த சுரங்க திஸாநாயக்க என்ற பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் போது வேகமாக செலுத்த வேண்டிய அம்பியூலன்ஸ் வண்டியை அதன் சாரதி மெதுவாக செலுத்தியதாகவும் மஹதிவுல்வெவ தெவனிபியவ இந்ராராம விகாரையின் விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த அம்பியூலன்ஸ் வண்டியில் நோயாளியை ஏற்றிச் செல்லும் போது வைத்தியர் செல்லவில்லை எனவும் பின்னர் ஏற்றிச் சென்ற நோயாளி பற்றி வைத்தியருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக வைத்தியர் முற்சக்கர வண்டியில் சென்று அம்பியூலன்ஸ் வண்டியில் ஏறியதாகவும் தெரியவந்துள்ளது.
ஆகவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தரான சுரங்க திஸாநாயக்கவின் மரணத்திற்கு மெதுவாக அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திய சாரதியும் பொறுப்பு கூர வேண்டும் எனவும் பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் உடனடியாக அம்பியூலன்ஸ் சாரதியை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



