அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூடு: நீதிமன்றத்தின் உத்தரவு!

Date:

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அருள் பயஸ் என்ற இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கைதரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் அனீபா ரஜீவ் குற்ற புலனாய்வுத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்பதாக கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை வளைவருகில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதான அருள் பயஸ் உயிரிழந்திருந்தார்.

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கட்டளையை மீறி ஹயஸ் வாகனத்தை சந்தேகத்திற்கிடமான வகையில் செலுத்தியதுடன், பொலிசாரை மோதிவிட்டும் தப்பிச் செல்ல முயற்சித்த போது, பொலிஸார் வாகனம் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டனர். வாகனத்தை செலுத்தி சென்ற இளைஞன் உயிரிழந்தார். கால்நடை திருட்டுக்காக சென்ற போது வாகனம் பொலிசாரின் சோதனையில் சிக்கியிருக்கலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றையதினம் (22) புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது கடந்த வழக்கு தவணையில் குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்ததை அடுத்து நீதிமன்று விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் பல வழக்குகள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதனால் வேலைபளு காரணமாக வழக்கு விசாரணைகளை மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்திற்கு பாரப்படுத்துவதாக கடந்த 07ஆம் திகதி திகதியிடப்பட்ட கடிதம் ஊடாக மன்றுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மத்திய குற்றப் புலனாய்வு பணியகம் வழக்கினை பாரமெடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையின்போது மத்திய குற்றப்புலனாய்வு பணியக அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகி ஊர்காவற்துறை பொலிசாரின் குறிப்பேடுகள் விசாரணை அறிக்கைகள் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் என்பவற்றை தாம் பாரம் எடுத்துள்ளதாகவும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சுற்றிக்கைக்கு அமைவாக துப்பாக்கிகளை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தாம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்றில் தெரிவித்தனர்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்திய மன்று சந்தேகநபர்களை விரைவாக கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டதுன் எதிர்வரும் மே 22 ஆம் திகதிக்கு வழக்கை திகதியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்