சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ, நைனமடம் பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து காணாமல் போன சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் ஜா-எல, போபிட்டியவைச் சேர்ந்த உமயங்கனா சத்சரணி என்ற 17 வயது சிறுமி ஆவார்.
கடந்த 28 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் நைனமடம், ஜின் ஓயா பாலத்திற்கு அருகில் வந்த சிறுமி, தனது காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கூறினார். சிறிது நேரத்தில் அந்த இளம் பெண் ஜின் ஓயாவில் குதித்தார். அதே நேரத்தில், அந்த இளைஞனும் அவரைக் காப்பாற்ற ஜின் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜின் ஓயாவில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரையும் காப்பாற்ற அருகிலுள்ள ஹோட்டலின் இரண்டு ஊழியர்கள் ஆற்றில் கயிற்றை வீசியதாகவும், அந்த இளைஞன் கயிற்றில் தொங்கியபடி கரைக்கு வந்ததாகவும், அந்த இளம் பெண் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வென்னப்புவ, நைனமடம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான ருமேஷ் லக்ஷன் என்ற இளைஞர் 1990 அவசரசேவை மூலம் மாரவில ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இறந்த சிறுமியின் தாய் தற்போது தனது இரண்டாவது கணவருடன் வசித்து வருவதாகவும், அவரது குடும்பத்தில் உள் பிரச்சினைகள் இருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஜின் ஓயாவில் குதித்து காணாமல் போன சிறுமியின் உடல், 29 ஆம் திகதி மதியம் உள்ளூர்வாசிகளால் பாலத்தின் அருகே மிதந்தபோது கண்டெடுக்கப்பட்டது.



