யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடம் நடாத்தும் ‘மானுடம்’ இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.
‘எல்லைகளுக்கு அப்பால் வரலாற்றுச் சமரசங்கள் பண்பாட்டு மோதல்கள் மற்றும் உலகளாவிய கலப்பொற்றுப் பிராந்தியங்கள் மீதான பயணம்’ என்னும் கருப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டுத் தொடரின் ஒருபகுதியாகக் கலைப்பீடம் இந்த மாநாட்டை ஒழுங்கமைத்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமான நிகழ்விற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மாநாட்டின் பிரதான ஒழுங்கமைப்பாளர் கலாநிதி பி.அகிலன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமை வகித்தார்.
மாநாட்டிற்கான திறவுரையை கனடா நாட்டின் மனிடோபா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் கலாநிதி ரவீந்திரன் வைத்தீஸ்பரா மேற்கொண்டதுடன் அமெரிக்க நாட்டின் சமூகவியல் துறை பேராசிரியர்
பிரான்செஸ்சா பிரம்னரும் சிறப்புரையாற்றினார்.
இன்றும் நாளையும் என இரண்டு தினங்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்படவுள்ளன.



