கல்வித் திணைக்களத்தின் பாராமுகமான செயற்பாடுகளால் பதுளை மாவடத்தின் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பதுளை திருமகள் வித்யாலயத்தைச் சேர்ந்த 15 க.பொ.த சாதாரண தரத்தை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக? பாடசாலைத் சமூகத்தினரும் மாணவர்களின் பெற்றோரும் விசனம் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த பாடசாலையில் இதுவரைகாலமும் தரம் 9 வரையிலுமே கல்விச் செயற்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. அதற்கு மேலும் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இப்பிரதேசத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர்களிற்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ள லுணுகலை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிக்கே செல்லவேண்டியிருந்தது. அதிகத் தொலைவுபயணிக்கச் சிரமமாயிருக்கின்ற காரணத்தினாலேயே கல்வி தரம் 9 முடிந்தவுடனேயே கல்வி இடைவிலகல் இப்பிரதேசத்தில் அதிகமாக நிகழ்ந்து வந்தமை பதுளை திருமகள் வித்தியாலயத்தின் ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் மாவட்ட கல்விப் பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டு அவர்களின் வாய்மொழி மூலமான அனுமதியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தரம் பத்தும் இவ்வாண்டு தரம் 11ற்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்று வந்தன. இவ்வாண்டு இறுதியில் திருமகள் வித்தியாலயத்தின் தரம் 11ல் கல்வி பயிலும் 15 மாணவர்கள் முதற்தடைவையாக க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவிருந்தனர்.
தரம் 10 மற்றும் 11ற்கான கற்பித்தல் செயற்பாடுகள். முன்னைய கல்விப் பணிப்பாளர்களின் வாய்மொழி மூல ஆலோசனையுடனும் மாணவர்களின் தேவை கருதியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், உத்தியோகபூர்வமாக இப்பாடசாலையில் தரம் 9 வரையிலுமே வகுப்புக்கள் உள்ளமையைச் சுட்டிக்காட்டி, இப்பாடசாலை மாணவர்களிற்கு க.பொ.த சாதாரண பரிட்சையில் தோற்றுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்குவதற்கு வலயக்கல்விப் பணிமனையினரால் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்ப்பக்கம் அறிந்துள்ளது. இதனால் இவ்வாண்டு பரீட்சைக்கு தோற்றவிருந்த 15 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதுடன் இனிவரும் காலங்களில் இப்பிரதேசத்தில் 9ம் தரத்துடன் பாடசாலைக் கல்வியில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் பிரதேசமக்களும்,கல்விச்சமூகத்தினரும் கவலை தெரிவித்தனர்.
ஆகவே மாகாண கல்வி பணிப்பாளர் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு பதுளை திருமகள் வித்யாலயத்தை சேர்ந்த 15 மாணவர்களுக்கும் விண்ணப்ப படிவங்களை வழங்கி இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியையும் அம் மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர். க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதிக்கு இன்னும் மூன்று நாட்கள் மாத்திரமே மீதம் உள்ளது என்பதனால் விரைந்து இம்முடிவுகள் எட்டப்படவேண்டியது கட்டாயமாகும். கவனிக்குமா மாகாணக் கல்வித் திணைக்களம்?




