முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியில் இராணுவ முகாமுக்கு சென்ற ஒருவரை காணவில்லையென பொதுமக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பொதுமக்களுக்கும், இராணுவத்துக்குமிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
முத்தையன்கட்டுகுளத்திற்கு அருகில் இராணுவ முகாமுக்கு நேற்றிரவு சுமார் 10 மணியளவில் அப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் சென்றுள்ளனர்.
அந்த இராணுவ முகாம் அங்கிருந்து அகற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தகரங்கள் தரலாம் என இராணுவ சிப்பாய் ஒருவர் கூறியதற்கு அமைவாக நால்வரும் சென்றுள்ளர்.
அங்கு இராணுவத்தினருக்கும், இளைஞர்களுக்குமிடையில் திடீரென முரண்பாடு ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட இராணுவத்தினர் சென்ற நான்கு பேரையும் தாக்கத்தொடங்கியுள்ளனர். இதனால் அந்த நால்வரும் ஒவ்வொரு திசையை நோக்கி ஓடியிருக்கின்றனர். அதில் மூவர் வீடு திரும்பிவிட்டனர் ஒருவருக்கு தற்போது வரை என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இது தொடர்பில் உறவினர்கள் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முத்தையன்கட்டு குளத்திற்குள்ளும் ஊரவர்கள் இறங்கி தேடியுள்ளனர். இருப்பினும் இவரை காணவில்லை. இதற்கிடையே பொது மக்களும் காணாமல் போனவர் தொடர்பில் இராணுவத்துடன் முரண்பட்டுள்ளனர்.




