தவிசாளராக்காவிட்டால் தற்கொலை… உறுப்பினர்களின் காலில் விழுந்தாரா சத்தியலிங்கம் எம்.பி?: வவுனியாவில் தமிழரசுக்குள் குழப்பம்!

Date:

வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தெரிவு நாளை (27) நடைபெறவுள்ள நிலையில், அங்கு இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள குழப்பம், நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், தமிழ் தேசிய பேரவைக்கும் இடையிலான உடன்படிக்கையின்படி, வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளரை இலங்கை தமிழரசு கட்சியும், உபதவிசாளரை தமிழ் தேசிய பேரவையும் பிரேரிக்கும்.

இந்த தரப்புக்கள் இணைந்து, வவுனியா வடக்கு பிரதேசசபையை கைப்பற்ற பிரகாசமான வாய்ப்பும் உள்ளது.

எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களுக்கிடையிலான இழுபறியால் நிலைமை சிக்கலாகியுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளராக பெண் உறுப்பினர் ஒருவரை நியமிக்க, இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா தொகுதிக்கிளை தலைவர் பா.சத்தியலிங்கம் விரும்புகிறார்.

எனினும், அந்த பெண்ணை தவிசாளராக நியமிக்க ஏனைய சபை உறுப்பினர்களோ, வவுனியா வடக்கு கட்சி கிளையோ விரும்பவில்லை.

இதனால் உறுப்பினர்களை சமரசப்படுத்த, 8 கூட்டங்களை சத்தியலிங்கம் நடத்தியுள்ளார்.

குறிப்பிட்ட பெண், சபையை நடத்தவல்ல சாமர்த்தியக்காரி அல்ல, அவரது குடும்பத்தினர் தென்னிலங்கை கட்சிகளின் அபிமானிகள் என கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

இதில், இரண்டு உறுப்பினர்களில் ஒருவரை தவிசாளராக்கலாமென தெரிவான ஏனைய உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தியும் ஒருமித்த முடிவில்லாததால், நேற்று வவுனியா வடக்கு தமிழரசு கட்சி உறுப்பினர்களுடன் சத்தியலிங்கம் மற்றொரு சந்திப்பை நடத்தினார். காலையில் தொடங்கிய சந்திப்பில் முடிவில்லாமல் நீள- தவிசாளராக்கலாமென ஏனைய உறுப்பினர்களால் குறிப்பிடப்பட்ட 2 உறுப்பினர்களையும் சத்தியலிங்கம், தனது அலுவலக அறைக்குள் அழைத்து சென்றதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதேசசபை உறுப்பினர்கள் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தனர்.

“திடீரென வெளியே வந்த இருவரும், தாம் அந்த பெண் தவிசாளராக ஆதரவளிப்பதாக அறிவித்தனர். 8 கூட்டங்களில் அந்த பெண்ணை ஏற்காமல் எதிர்த்தவர்கள், சத்தியலிங்கம் அறைக்குள் அழைத்து சென்றதும் ஏன் திடீரென மாறினார்கள் என்ற சந்தேகம் எமக்கு எழுந்தது. அந்த உறுப்பினர்களிடம் கேட்டபோது, சத்தியலிங்கம் எம்.பி அறையை பூட்டிவிட்டு எமது காலில் விழுந்து கேட்டார். அதனால் எம்மால் தட்ட முடியவில்லை என்றனர்“ என வவுனியா வடக்கு பிரதேசசபையின் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, தவிசாளர் என பா.சத்தியலிங்கத்தால் விரல் சுட்டப்பட்ட பெண்ணும், அடைந்தால் தவிசாளர், இல்லையேல் மரணதேவி என்ற பாணியில் மிரட்டல் விடுவதாக ஏனைய உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

“அந்தப் பெண் இப்பொழுது கட்சியின் ஏனைய பிரதேசசபை உறுப்பினர்களுடன் பேசுவதேயில்லை. நாம் அவரை எதிர்க்கிறோம் என நினைத்தோ, தான் தவிசாளரானால் உறுப்பினர்களுடன் பேசுவது கௌரவ குறைவு என நினைத்தோ அவர் பேசவில்லை. ஆனால், தான் தவிசாளராகப் போவதாக அனைவரிடமும் கூறவிட்டேன் என்றும், பலர் பேஸ்புக் வழியாக கூட தன்னை வாழ்த்தியதாகவும், தவிசாளர் இல்லையென இனிமேல் சொன்னால் அந்த அவமானத்தை தன்னால் தாங்க முடியாதென்றும், தான் உயிரை மாய்த்து விடுவேன் என்றும், அப்படி நடந்தால் கட்சியே தனது முடிவுக்கு காரணம்“ என்றும் அந்த பெண் குறிப்பிட்டு வருவதாக மற்றைய உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலையில், அந்த பெண்ணை தவிசாளராக அறிவித்தால், 3 வரையான உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதை பற்றி பரிசீலித்து வருவதாக பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை? இந்த சிக்கல் பற்றி அறிந்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய பேரவையின் பிரமுகர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர். தமிழரசு கட்சியுடனான ஒப்பந்தத்தை தாம் மீற மாற்டோம் என்றும், கட்சியாக தீர்மானிக்கும் தவிசாளரை தாம் ஆதரிப்போம் என்றும் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்