தன்னை கட்சியிலிருந்து இடைநீக்கியதற்கு எதிராக வைத்தியர் சிவமோகன் தாக்கல் செய்த வழக்கை இன்று வாபஸ் பெறுவார் என தெரிகிறது. இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், சிவமோகனுக்குமிடையில் ஏற்பட்டுள்ள புதிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக சிவமோகன், கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என குறிப்பிட்டு எம்.ஏ.சுமந்திரன் தரப்பினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.
“முக்கிய விடயங்களில் நான் கட்சிக்குள் எதிர்த்து போராடினேன். அவர்கள் என்னை இடைநிறுத்தினர். நான் வழக்கு தொடர்ந்தேன். அதில் தற்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அது நல்லதுதானே“ என வைத்தியர் சிவமோகன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
முல்லைத்தீவிலுள்ள தனது தரப்பினருக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் நடந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாகவும், தானும், சுமந்திரனும் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தான் வழக்கை வாபஸ் பெற்றதையடுத்து, தனக்கு எதிரான தடைகள் நீக்கப்பட்டு, தான் கட்சிக்குள் முன்னர் செயற்பட்ட அதே நிலையில் செயற்படுவேன் என்றும் தெரிவித்தார்.



