பண்டிதர். வீரகத்திப் பிள்ளை பரந்தாமன்
தோற்றம்: 15.08.1942 மறைவு: 14.06.2025
ஈழத்தின் பெரும் படைப்பாளி பண்டிதர் வீ.பரந்தாமன் காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பிரபலமான படைப்பாளியும்,
“மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி
வழியில் நடந்தான் மாவீரன்
அவன் போன வழியில்
புயலேன எழுந்து
போரில் வந்தார் புலி வீரர்..”
என்ற உணர்வுமிக்க புகழ்பெற்ற ஈழப் புரட்சிப் பாடலை எழுதிய கவிஞர், தமிழ் அறிஞர், எழுத்தாளர் எனப் பல பரிணாமங்கள் கொண்ட தேசியச் செயற்பாட்டாளர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்களின் மறைவு தமிழ் தேசிய உணர்வாளர்களிற்குப் பேரிழப்பு.
இவர் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர், கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனரும் ஆவார்.
“தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” , “கெரில்லாப் போர் விறகுகள்”, “மனிதரும் கடவுளும்”, “வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி” என்று பல நூல்களை எழுதித் தமிழினத்துக்காகவும், தமிழ்மொழிக்காகவும் பல்வேறுவகைகளிலும் தன்னை அர்பணித்துப் பணிசெய்த களப்பணியாளர்.
தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின்பால் பெரும் அக்கறைகொண்டு பேராதரவாளராகச் செயற்பட்டு வந்த பண்டிதர்.வீ.பரந்தாமன் அவர்களின் புதல்வன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இறுதிப்போரில் இராணுவத்தினரால் காணாமலாக்கப்பட்டவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பருத்தித்துறை புலோலி- புற்றளையில் தன் இறுதிக் காலத்தில் வசித்துவந்த நிலையில் முதுமை காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.




