மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்து, பெண்களை தாக்கிய நபர் ஒருவர் அயலவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.
ஏற்கெனவே 2 முறை இந்த நபர், இதே பகுதியில் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களால் பிடிக்கப்பட்டு, பொலிசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு மனநல காரணங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறையை பூர்வீகமாகவும் தற்போது கனடாவில் வசிப்பவருமான நபர் ஒருவரே இவ்வாறு கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டுக்குள் நுழைந்து பெண்களையும், குழந்தைகளையும் தாக்கி காயப்படுத்திய நபர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைந்ததாக குறிப்பிட்டு, இந்த தொடர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்றும் அந்த நபர் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அந்த பெண்ணையும், தாயாரையும் அவர் தாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது. அயலவர்கள் அந்த நபரை பிடித்து, மரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர்.
பின்னர் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதால் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



