இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாகவும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 23ம் திகதி மன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டு, அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி 32 இந்திய மீனவர்கள் மற்றும் 5 படகுகளை கைப்பற்றியிருந்தனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்குமிடையிலான மீன்பிடி பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதோடு, தமிழக அரசையும் இந்திய அரசையும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை மீனவர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ அமைப்புகள், இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளை எதிர்த்து நாளை (27) யாழ்ப்பாணத்தில் பாரிய கண்டன பேரணியை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை சமரசமில்லாத நிலைக்கு செல்லக்கூடியதாக மாறியுள்ளது. தமிழக அரசும், இந்திய மீனவ சங்கங்களும் இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் தங்களது கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்பதற்காக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கைதான மீனவர்கள் யாரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால், தமிழக மீனவர்கள் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் மற்றும் இருநாட்டு உறவுகளை பாதிக்கக்கூடியதாக உருவெடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




