எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம் அமைப்பினரை கூட்டணியில் இணைக்கலாமா என நடத்திய பேச்சை இலங்கை தமிழ் அரசு கட்சி கைவிட்டுள்ளது.
பொ.ஐங்கரநேசன் விதித்த நிபந்தனைகளால் இந்த பேச்சுக்கள் முடிந்துள்ளன.
கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அண்மையில் பொ.ஐங்கரநேசனை சந்தித்து கூட்டணி குறித்து பேசியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் நல்லூர் தொகுதிக்கிளை தலைவராக பதவி வகிப்பவர் சீ.வீ.கே.சிவஞானம். அந்த தொகுதியில் மாத்திரம் ஓரளவு செல்வாக்குள்ள அமைப்பு தமிழ் தேசிய பசுமை இயக்கம். உள்ளூராட்சி தேர்தலில் நல்லூர் தொகுதியை இழக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் சீ.வீ.கே இந்த பேச்சை முன்னெடுத்திருக்கலாம்.
தமிழ் அரசு கட்சி அதிகபட்ச விட்டுக்கொடுப்பை செய்தே பேச்சை ஆரம்பித்துள்ளது.
நல்லூர் பிரதேசசபைக்கு ஐங்கரநேசனை முதன்மை வேட்பாளராக அறிவித்து போட்டியிடுவதென்றும், ஆட்சியை கைப்பற்றும் நிலைமையேற்பட்டால் ஐங்கரநேசனை தவிசாளராகவும், தமிழ் அரசு கட்சியின் தியாகமூர்த்தியை உப தவிசாளராகவும் நியமிக்கலாம் என்பது சீ.வீ.கேயின் யோசனை.
ஆனால் ஐங்கரநேசன் அதற்கு உடன்படவில்லை.
விரைவில் மாகாணசபை தேர்தல் வரவுள்ளதால், அதில் போட்டியிட வேண்டுமென்றும், அனைத்து தேர்தல்களிலும் தான் போட்டியிடுவது கட்சிக்குள்ளும், வெளியிலும் விமர்சனத்தை ஏற்படுத்துமென்பதால், உள்ளூரட்சிசபை தேர்தலில் தான் போட்டியிடுவதை பற்றி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையென்றும் கூறியுள்ளார்.
இதனால், தான் குறிப்பிடும்- தமது தரப்பை சேர்ந்த ஒருவரை தவிசாளராக நியமிப்பதென்றால் இணைந்து போட்டியிடலாமென நிபந்தனை விதித்துள்ளார்.
எனினும், தமிழ் அரசு கட்சி அதை ஏற்கவில்லை.
இதனால் கூட்டணி பேச்சுக்கள் முடிந்து விட்டன.
தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ் தேசிய வாக்குகளும் கணிசமான பிளவை சந்தித்துள்ள நிலையில்- உள்ளூராட்சிசபை தேர்தல் முறையுடன் சேர்ந்து- தனிக்கட்சிகள் ஆட்சியை பிடிப்பது சிரமமாக இருக்கும். அதிலும் ஐங்கரநேசன் தரப்பு போன்ற சிறு அமைப்புக்களின் நிலைமையை சொல்லத் தேவையில்லை. ஆனால், ஆட்சியமைப்பதில் இப்படியான சிறு குழுக்களின் ஆதரவு கட்டாயமாக தேவைப்படும்.
இந்த கணக்கின் அடிப்படையில் ஐங்கரநேசன் பேரம் பேச முயல்கிறார் போல தெரிகிறது.



