சிவராத்திரி விரத நாளான இன்றைய தினம் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், கலை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
தட்க்ஷிணகைலாயம் என சிறப்புபெறும் திருகோணமலையில் அமைந்துள்ள மாதுமையம்பாள் சமேத திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா பக்தியுடன் அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்றது.
மகா சிவராத்திரி விரத நாளாகிய இன்றைய தினம் (26) பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் ஆலயத்தை அடைந்து இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவராத்திரி விரத நாளை முன்னிட்டு, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருவதோடு, பக்தர்கள் பக்தி பூர்வமாக இதில் பங்கேற்று வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலை முதலே ஆலயத்தினுள் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன. குறிப்பாக, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், வேத பாராயணங்கள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று, பக்தர்கள் சிவன் திருநாமம் ஜபித்து மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
இன்று இரவு முழுவதும் நடைபெறும் பூஜைகள் மற்றும் தீபாராதனைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு, சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




