கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் நேற்று (24) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் அவரது இளைய சகோதரர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19ம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல்களை மறைத்தமை மற்றும் குற்றத்திற்குத் துணை புரிந்தமைக்காக நீர்கொழும்பு கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான பின்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க, 48 வயதான சேசத்புர தேவகே சமந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்தக் குற்றச்செயலுடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் நீதித்துறை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பாதுகாப்புப் படைகள் மற்றும் காவல்துறையினர் உட்பட சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் வெளியிட்ட உரையில் தெரிவித்துள்ளார்.
தற்போது, நீதிபதி மற்றும் சட்டம் அமுலாக்க அதிகாரிகளின் கீழ் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மேலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த கொலை வழக்கு நாட்டில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பொது மக்கள் மற்றும் சட்டவியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



