வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின் உற்பத்திக்கு மத்தியில், தேசிய மின் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக நாடு முழுவதும் பல மின்சார விநியோக இணைப்புகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டமைப்பு செயற்பட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (30) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், வெசாக் பௌர்ணமி விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதி காரணமாக மின்சாரத் தேவை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், அதே சமயம் சாதகமான வானிலை காரணமாக மேற்கூரை அமைப்புகளிலிருந்து சூரிய மின் உற்பத்தி எதிர்பார்ப்புகளை மீறியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதன் விளைவாக, மின் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யவும், உள்ளூர் தேவையை விட சூரிய மின் உற்பத்தி அதிகமாக இருந்த பகுதிகளில் உள்ள பல 33kV மின்சார விநியோக இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
தேசிய மின் கட்டமைப்பில் சமநிலையை மீட்டெடுக்க உதவும் வகையில், மேற்கூரை சூரிய மின் தகடு உரிமையாளர்கள் இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தாங்களாகவே முன்வந்து தங்கள் அமைப்புகளை அணைத்து வைக்குமாறு NSO கேட்டுக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிற்பகல் 3.00 மணிக்குள் மின்சார அமைப்பைச் சீரமைத்து, விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அந்தச் செயலகம் தெரிவித்துள்ளது.
நாளை (31) இதேபோன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவதாக NSO மேலும் எச்சரித்ததுடன், அதே காலகட்டத்தில் தங்களது கூரை அமைப்புகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்வதன் மூலம் மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையை பராமரிக்கும் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு சோலார் பனல் உரிமையாளர்களை வலியுறுத்தியது.
இத்தகைய ஒத்துழைப்பு, மேலும் மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்கவும், நுகர்வோருக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்யவும் உதவும் என்று அந்த நிறுவனம் கூறியது.




