இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகளை முன்வைத்து பாராளுமன்றத்தில் (22.02.2025) முக்கியமான ஒத்திவைக்கும் பிரேரணையை வழிமொழிந்தார். இந்த பிரேரணையின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், இது நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மீன்பிடித் துறை அமைச்சராக தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருப்பதை அவர் விமர்சித்தார். தமிழர்களுக்குள் மோதல் உருவாக, அரசாங்கம் திட்டமிட்டு தமிழரை மீன்பிடி அமைச்சராக நியமிக்கிறது என்றும், வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது காலம் கடந்துவிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சாணக்கியன், முன்னாள் மீன்பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த பிரச்சினையை தீர்க்கத் தவறியதால், அவருக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு எழுந்து, பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தற்போது இந்த அமைச்சு சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டிருப்பது திட்டமிட்ட வில்லங்கமெனவும் குறிப்பிட்டார்.
சட்டவிரோத மீன்பிடி முறைகள் வட மற்றும் கிழக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், கடல்சார் சூழலையும் பெரிதும் பாதிக்கின்றன. கடந்த ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் இந்த பிரச்சினையை கையாளாமல் காலம் கடத்துகிறது. மீனவ பிரச்சினைக்கு உடனடி தீர்வு தேவை என வலியுறுத்திய சாணக்கியன், கடந்த 2022ம் ஆண்டு முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆயிரக்கணக்கான படகுகள் பங்கேற்ற போராட்டம் நடத்தப்பட்டதையும், அதனால் ஒரு காலத்திற்கு பிரச்சினை குறைந்ததையும் நினைவூட்டினார்.
மேலும், மீன்பிடித் துறையில் காணப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறுவதையும் அவர் விமர்சித்தார். பாதுகாப்பு துறைக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த முடியாதது ஏன் என கேள்வியெழுப்பினார்.
இவ்வாறான சூழலில், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காலம் கடத்தாமல் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




