நேற்று (23) ஹமாஸ் அமைப்பு ஆறு இஸ்ரேலிய கைதிகளை விடுவித்தபோது, அவர்களில் ஒருவரால் ஹமாஸ் போராளிக்கு நெற்றியில் முத்தமிடப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கைதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் திடீரென அதனை மறுத்துள்ளது. இதனால், அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
காசாவில் கடந்த 15 மாதமாக தொடர்ந்து நடந்த போர், ஜனவரி 19ம் திகதி தற்காலிக அமைதி உடன்படிக்கை மூலம் நிறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல், காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல், தொடர்ந்து நடந்து வந்த குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு உதவி வழங்குதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கியிருந்தன.
இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பல கட்டங்களில் கைதி பரிமாற்றம் நடைபெற்று வந்தது. நேற்று ஹமாஸ், ஆறு இஸ்ரேல் பணய கைதிகளை விடுவித்த நிலையில், எதிர்பார்த்தபடி, அவர்களுக்கு மாற்றாக 650 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மறுத்துவிட்டது.
இந்நிலையில், மார்ச் 1ம் திகதியுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைய உள்ளதால், அடுத்த கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை மிகுந்த அனிச்சையில் உள்ளது. இதனிடையே, இஸ்ரேல் தொடர்ந்து ஒப்பந்த விதிகளை மீறிவருவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி பாஸ்ஸெம் நயீம் குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு செவ்வியளித்த பாஸ்ஸெம் நயீம், “போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100 பலஸ்தீனியர்களைக் கொன்றது. இதுபோன்று தொடர்ந்து வரும் செயல்கள் ஒப்பந்தத்தை முறிக்கவும், மீண்டும் போருக்குத் திரும்புவதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு மோசமான தந்திரம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.




