இலங்கையில் உள்ள ஊடக நிறுவனங்களை லைக்கா மொபைல் சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறி, அந்த நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை மார்ச் 27ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷார தாக்கல் செய்த இந்த மனுவில், லைக்கா மொபைல் நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதுடன், அரசாங்கம் அந்த நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட சொத்துகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதியரசர் காமினி அமரசேகர, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதி குழாமின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர், EAP ஊடக வலையமைப்பு உள்ளிட்ட பல ஊடக நிறுவனங்களை லைக்கா மொபைல் சட்டத்திற்கு முரணாக கைப்பற்றியதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தச் செயல்கள் இலங்கையின் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறியுள்ளதால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், லைக்கா மொபைல் மேற்கொண்ட செயல்பாடுகள் தேசியப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மார்ச் 27ம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.



