எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் முன்னைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் இணக்கப்பாட்டுடன் செயற்பட முடியுமா என பேச்சுவார்த்தை நடத்துவதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தமிழர்கள் தமிழ் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டுமென்ற கோசத்தை முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (16) மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.
இதன்போது, உள்ளூராட்சிசபை தேர்தல், புதிய அரசியல் தீர்வு விவகாரம் பற்றி ஆராயப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள் உள்ளூராட்சி தேர்தலிலும், தேர்தலின் பின்னர் ஆட்சியமைப்பதிலும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தனுடனும், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடனும் பேச்சு நடத்தியதாக, பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தல் முறைமை காரணமாக, தனித்தரப்பு ஆட்சியமைப்பதில் சிக்கல், தேசிய மக்கள் சக்தி ஆதரவு நிலை ஆகியவை காரணமாக, முன்னைய தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகளுடன் பேச்சு நடத்தி, தேர்தலின் பின்னர் இணைந்து ஆட்சியமைப்பது பற்றி பேச்சு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த பேச்சுக்களை பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் ஆகிய இருவரும் முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், உள்ளூராட்சிதேர்தலில் தமிழர்கள் தமிழ் கட்சிகளுக்கே- தமிழர்கள் தலைவர்களாக உள்ள கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டுமென்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
அரசியல் தீர்வு விவகாரத்தில் நாடளுமன்றத்தில் தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியாக செயற்படுவது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆரம்பித்துள்ள முயற்சி பற்றியும் ஆராயப்பட்டது.
அரசாங்கம் உனடியாக அரசியல் தீர்வு விவகாரத்தை கையிலெடுக்கும் நிலைமை தென்படாததால், இந்த விவகாரத்தில் அவசரம் காட்டாமல், நிலைமையை பொறுத்து தீர்மானம் எடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.