அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 10,000 அரசாங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அரசாங்க செலவினங்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக காணப்படுகிறது. அமெரிக்க அரசாங்கத்தில் மொத்தம் 2 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றிவரும் நிலையில், சிலர் செயல்திறனற்றவர்களாகவும் நிர்பந்தமாக அரசின் மீது பொருளாதார சுமை ஏற்படுத்துவதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உள்துறை, எரிசக்தி, வேளாண்மை, பணி ஓய்வு பெற்றோர் விவகாரங்கள், சுகாதாரம், சேவைகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர். சில அலுவலகங்களில் 70% வரை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், செயல்திறன் குறைவாகக் காணப்படும் துறைகளில் பணியாற்றுபவர்கள் தாமாகவே இராஜினாமா செய்தால் அவர்களுக்கு பல்வேறு நன்மைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்று 75,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஊதியம் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதியளித்திருந்தாலும், செலவினக் கட்டுப்பாட்டு விதிகள் மார்ச் 14க்குப் பிறகு நிறைவடையவுள்ளதால், அதன் பின்னர் ஊதியம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு கடனில் மூழ்கியுள்ளதாகவும் தேவையற்ற பதவிகளுக்காக அதிகம் செலவிடப்படுவதாகவும் கூறிய ட்ரம்ப், பணிநீக்க நடவடிக்கை கட்டாயமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்ப்புகள், போராட்டங்கள் எழுந்தாலும் எந்த மாற்றத்திற்கும் இடமளிக்காமல் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.



