மாத்தளை கடுவெல, போமிரிய பகுதியில் உள்ள ஒரு தேசிய பாடசாலையில், நேற்று (11) பிற்பகல், கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவ மாணவிகள் மீது வெளியாட்கள் குழு ஒன்று பலவந்தமாக நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்து நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் அதிபர், இந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர், சில நாட்களுக்கு முன்பும் சில பாடசாலை குழந்தைகளை தாக்கியதாகவும், நேற்றும் மேலும் சிலருடன் வந்து பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலையின் பழைய மாணவருடன் பாடசாலைக்குள் நுழைந்த வெளியாட்கள் இவ்வாறு மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
சிறுவர்களைத் தாக்கும் போது அவர்களைக் காப்பாற்றச் சென்ற மாணவிகளையும் பூந்தொட்டிகள், விளக்குமாறு, துடைப்பம் போன்ற பொருட்களால் தாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த நாட்களிலும் வவுனியாவில் அமைந்துள்ள பாடசாலையிலும் இது போன்று வெளியாட்கள் உள்நுழைந்து மாணவர் ஒருவரை தாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.