இன்று திங்கட்கிழமை (10) திருகோணமலை மாவட்டத்தில் நில மீட்புக்கான கலந்துரையாடல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர். AHRC மற்றும் PCCJ நிறுவனங்கள் இணைந்து நில மீட்புக்கான செயற்றிட்டத்தின் கீழ் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தன.
திருகோணமலை மாவட்டத்தில் நில அபகரிப்புகள் மற்றும் அவற்றைக் காக்கும் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலின் போது, நிலங்களை மீட்டுக்கொள்வதற்கான சட்ட முன்னெடுப்புகள் பற்றி பேசப்பட்டது. யுத்தம் முடிந்த பிறகு, பொதுமக்களின் காணிகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட முறையில், தனிப்பட்ட தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டுள்ளதோடு, இதனை எதிர்த்து மக்கள் வலையமைப்பாக இணைந்து செயல்பட வேண்டும் என அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, முத்துநகர், சம்பூர், திரியாய், தென்னமரவாடி, 64ம் கட்டை போன்ற இடங்களில் காணி அபகரிப்பின் பிரச்சனைகள் பற்றி சமூகத்தினர் கருத்து தெரிவித்தனர். அவர்களது பிரச்சனைகளை ஒவ்வொரு கிராமம் சார்ந்து தரவுகளாக சேகரித்து, கிழக்கு மாகாண ஆளுநருக்கு மகஜர் கையளிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த கலந்துரையாடல் மூலம், நில உரிமை மீறல்களைத் தடுப்பதற்கும், இழந்த நிலங்களை மீட்டுக்கொள்வதற்கும் மக்கள், சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்




