மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்களை உறுதிப்படுத்தக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் ஒன்றுகூடிய பட்டதாரிகள், அரசிடமிருந்து பதில் ஏதும் கிடைக்காமல் தமது எதிர்காலம் அநீதியாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அரச நியமனத்தினை உறுதிப்படுத்து”, “காட்டாதே! காட்டாதே! பாரபட்சம் காட்டாதே!”, “அழிக்காதே! அழிக்காதே! எங்களது கனவுகளை அழிக்காதே!”, “வயது ஏறுது! வாழ்க்கை போகுது! வேலை வேண்டும்” எனக் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இருக்கின்ற போதிலும், அவர்கள் எந்தவொரு அரச நியமனத்தையும் பெறவில்லை எனத் தெரிவித்தனர். பல்வேறு துறைகளில் பட்டம் முடித்துள்ள போதிலும் வேலை வாய்ப்புகளுக்கான எந்தவொரு உறுதியும் அரசால் வழங்கப்படாதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பழைய மாவட்ட செயலகத்திற்குச் சென்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியாக விலகினர்.
இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை வாய்ப்பின்மை மற்றும் அரசின் தாமதமான நடவடிக்கைகளுக்கெதிரான போராட்டமாக விளங்கியது. இது தொடர்பாக அதிகாரிகளின் பதில் எதிர்பார்க்கப்படுகிறது.
