அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த இச் சம்பவம் சர்வதேச அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருப்பது, அந்த நீதிமன்றத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில், பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகை விஜயம் செய்ததற்குப் பிறகு, இந்த உத்தரவு வெளியானது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா-இஸ்ரேல் உறவினை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.