முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்களை சோதனையின்றி விடுவித்தமைக்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி எதிர்க்கட்சி தலைவரால் அரசிடம் எழுப்பப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களுக்கு மத்தியில், சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்ற வேளையில், இது தொடர்பில் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்த துறைக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல துறைகளுக்கு மறைமுகமாக பாதிப்பு ஏற்படுவதால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் இன்று (06) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் ஈட்டும் எம்மைப் போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாட்டிற்கு நல்லதல்ல எனவும், இது தொடர்பில், ‘கட்டாயம் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என சிவப்பு முத்திரை’ பொறிக்கப்பட்ட 323 கொள்கலன்களை பரிசோதிக்கப்படாமல் வெளியில் விட்டது தொடர்பில் யார் பொறுப்பேற்பது? ஏன் அவ்வாறு விடுவிக்கப்பட்டன என்றும் அரசாங்கத்திடம் அவர் வினாக்களை தொடுத்துள்ளார்.
கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிக்கப்படுவதில் ஏற்பட்ட பாரிய நெரிசல் மற்றும் காலதாமதத்தினால் திருப்பியனுப்பப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். இதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த கொள்கலன்களில் உள்ள பொருட்கள் எவை? அவற்றை சபைக்கு சமர்ப்பியுங்கள் என்றும், அவை சட்டவிரோதமானை அல்லது மனித நுகர்வுக்கு தகுதியற்றவை அல்ல என்று பரிசோதனை மேற்கொள்ளாமல் முடிவு செய்தவர்கள் மற்றும் அவற்றை இறக்குமதி செய்தவர்கள் யார் என்பதையும் சபைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பில் யார் முழுப்பொறுப்பெடுப்பது? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், இவை சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் அல்ல என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




