இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று (04) வெகு விமர்சையாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
“மூவின மக்களின் ஒன்றிணைந்த சுதந்திர தின கொண்டாட்டம் – அழகான தேசம், அன்பான மக்கள்” என்ற தொனிப்பொருளில், மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மாபெரும் நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி, மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதி ஊடாக இரண்டு வாகன பேரணிகள் எழுச்சியுடன் நகர்ந்து, இறுதியில் காந்தி பூங்காவை வந்தடைந்தன.
அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் கலந்துகொண்டார். மூவின மதத் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் இந்த விழாவை சிறப்பிக்கக் கலந்து கொண்டனர்.
மேலும், மட்டக்களப்பு பிரதான பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் பியந்த பண்டார அவர்களின் ஏற்பாட்டில், பயன்தரும் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பதில் பிரதிப் பொலிஸ்மாதிபர் எச். சமுத்திர ஜீவ அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.


