சிவப்பு அரிசிக்குப் பதிலாக வெள்ளை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தையில் சிவப்பு அரிசி மற்றும் பச்சை அரிசி பற்றாக்குறை நிலவுவதால், சில தொழிலதிபர்கள் இத்தகைய மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்துள்ளதாகவும் அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மோசடிகளை கண்டறிய அதிகாரசபை சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றது. கடந்த சில நாட்களில் மட்டும், ஒழுங்குமுறை விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்ததற்காக 140 க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சமீபத்தில் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ததற்காக 1 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும், சந்தையில் நிலவுகின்ற மோசடிகளை தடுக்கவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை திடீர் சோதனைகளை தொடரும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.




