வேங்கைவயல் சம்பவம் தனிப்பட்ட விரோதம்: தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் – தமிழக அரசு வேண்டுகோள்

Date:

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன.

இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், வெள்ளானூர் காவல் நிலையத்தில் கடந்த 2022 டிச.26-ம் தேதி வழக்கு பதியப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில்கொண்டு, இவ்வழக்கின் புலன் விசாரணையை கடந்த 2023 ஜன.14-ம் தேதி சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி மாற்றினார்.

அதைத் தொடர்ந்து, சிபிசிஐடி ஏடிஜிபி உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத்தவிர, பல நபர்களின் கைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, விரிவான டிஎன்ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், சில விவரங்கள் உறுதி செய்யப்பட்டன. அதன்படி, சம்பவம் நடப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் அதாவது 2022 அக்.2-ம் தேதி வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக, முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவி்ன் கணவர் முத்தையா என்பவர் கிராமசபைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை காவலர் முரளி ராஜாவின் தந்தை ஜீவானந்தத்தை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார்.

இச்சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில் முரளி ராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் முரளி ராஜா, சுதர்சன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது, அதில், இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது ஜன.20-ம் தேதி நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்