தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒருபோதும் எதுவிதமான உயிரச்சுறுத்தலும் இல்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, ‘மகிந்த ராஜபக்சவின் மீது புலிகளுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை என்றும், போர் இடம்பெற்ற தருணத்திலும் அவருக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தலும் இருக்கவில்லை என்றும், மகிந்த ராஜபக்ச மீது குண்டுத் தாக்குதலை நடத்தவோ அல்லது வேறு விதமான தாக்குதலையோ அவர்கள் நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மகிந்த ராஜபக்ச தனியாகவா யுத்தம் செய்தார்? நாம் யுத்தம் செய்யவில்லையா? யுத்தத்துக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான எனது முழுமையான பாதுகாப்பை 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறு வெளியாகுவதற்கு முன்னரே நீக்கியிருந்தார். அப்போது எனக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லையா? வெலிகடை சிறையில் என்னை அடைத்த தருணத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் சிறையில் இருந்தார். அத்தருணத்தில் எனக்கு எவ்வித விசேட பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த தருணத்திலும் இராணுவத் தலைமையகத்தில் என்மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தவந்திருந்த மொரிஸ் என்ற நபரும் நானும் ஒரே வாங்கில் தான் அமர்ந்திருந்தோம். அப்போது எனக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லையா? என்று கேள்வியெழுப்பிய வகையில் கூறியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச பிரபாகரனுடன் சமதான பேச்சுகளை நடத்தி யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவே ஆட்சிக்கு வந்தார். போர் முடிவதற்கு 3 மாதங்கள் இருந்த தருணத்தில் போர் நிறுத்தமொன்றையும் அறிவித்தார்.
பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச் செல்லவே அவர் அந்த நடவடிக்கையை எடுத்திருந்தார். போர் நிறுத்த அறிவிப்பு காரணமாக மூன்று மாதங்கள் போர் பின்நோக்கிச் சென்றதுடன், இராணுவத்தினரும் 5 கிலோ மீற்றர் தூரம் வரை பின்னோக்கி நகரும் நிலை ஏற்பட்டது.
மகிந்த ராஜபக்ச புலிகளுடன் நெருங்கிய உறவை பேணியிருந்தார். அதனால் புலிகளால் அவரது உயிருக்கு ஒருபோதும் ஆபத்து இல்லை என்றும் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.



