பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (29) அனுமதி வழங்கியுள்ளது.
தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான பிரேரணையை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவை தனிப்பட்ட பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார்.
முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசியலமைப்பு பேரவையின் ஏனைய உறுப்பினர்கள் உட்பட பிரதிவாதிகள் பலரின் தனிப்பட்ட முகவரிகளை உள்ளடக்கி, நடவடிக்கைகளில் முறையான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் மனுவில் திருத்தம் செய்யுமாறு பீரிஸ் மேலும் கோரினார்.
இந்த நியமனம் அரசியலமைப்பு பேரவையினால் முறையற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் கபீர் ஹாசிம் இருவரும் வேட்புமனுவை எதிர்த்ததாகவும், இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு இருந்தபோதிலும், சபாநாயகர் நியமனத்திற்கு ஆதரவாக தீர்க்கமான வாக்களித்ததாக கூறப்படுகிறது, இந்த முடிவு அங்கீகரிக்கப்படாதது மற்றும் முறையற்ற முறையில் கையாளப்பட்டது என்று மனு வாதிடுகிறது.
சபாநாயகரின் நடவடிக்கைகள் தன்னிச்சையானவை என்றும், இந்த நியமனம் இலங்கை பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தென்னகோனின் பொலிஸ்ம அதிபர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அது கோருகிறது.
இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.