இமயமலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு இனத்துக்கு ஹாலிவுட் நடிகரும் சுற்றுசூழல் ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோ பெயர் வைக்கப்பட்டுள்ளது.
‘ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய்’ (Anguiculus dicaprioi) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த புதிய வகை பாம்பினம் மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம் வரை பரவியுள்ளது. அதே போல ‘ஆங்கிகுலஸ் ராப்பி’ (Anguiculus rappii) எனப்படும் பாம்பினம் சிக்கிம், பூடான் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
இந்த பாம்புகள் மே மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை மட்டுமே தென்படுவதாகவும் மற்ற நாட்களில் இவற்றை பார்ப்பது மிகவும் அரிது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்த பாம்புகள் பற்றிய எந்த தகவலும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கின்போது மேற்கு இமயமலைப் பகுதியில் உள்ள தனது வீட்டின் கொல்லைப் புறத்தில் வீரேந்தர் பரத்வாஜ் என்பவர் ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய் பாம்பை முதன்முறையாக பார்த்துள்ளார். தனது சமூக வலைதள பக்கங்களில் அந்த பாம்பின் புகைப்படங்களை அவர் பகிர்ந்த பிறகே அது குறித்த தகவல் வெளியே வந்துள்ளது. கிழக்கு இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஆங்கிகுலஸ் ராப்பி பாம்பின் தோற்றத்தை ஒத்திருப்பதை தெரிந்து கொண்ட ஆய்வாளர்கள் கடந்த 3 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு அதற்கு பெயர் சூட்டியுள்ளனர்.
ஆய்வில் இந்த பாம்பின் மரபணு வரிசை ஆசியா முழுவதும் உள்ள எந்த பாம்பு இனத்துடன் பொருந்தவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிந்துகொண்டனர். இதன் மூலம் இந்த புதிய வகை பாம்பு இமயமலை பகுதிகளில் மட்டுமே தென்படக்கூடியது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
‘டைட்டானிக்’, ‘ஷட்டர் ஐலேண்ட்’, ‘இன்செப்ஷன்’ என புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, நடிப்பு தவிர்த்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாடு குறித்த விழிப்புணர்வுக்காகவும் போராடி வருகிறார். இது தொடர்பான ஏராளமான ஆவணப்படங்களையும் அவர் எடுத்துள்ளார். இதனை கருத்தில் கொண்டே இந்த புதிய பாம்பினத்துக்கு அவருடைய பெயரை சூட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.




