இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை திட்டியதாகவும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களை தாக்கியதாகவும் கூறப்படும் வாகன விபத்து தொடர்பில் புத்தளம் மாவட்டத்திலுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகரை புத்தளம் பொலிஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரி மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தனது குடும்ப உறுப்பினர்களுடன் புத்தளம்-கொழும்பு வீதியில் நிதியமைச்சின் ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்த போது, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஓட்டிச் சென்ற காரை முந்திச் செல்ல முற்பட்ட போது, ஜீப் காருடன் சற்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது போதையில் இருந்த ஏ.எஸ்.பி., ஜீப் ஓட்டுநரை பிடித்து இழுத்துச் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
விபத்து நடந்தபோது, ஏஎஸ்பி சிவில் உடையில் இருந்ததார். அவர் இராஜாங்க அமைச்சரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் துன்புறுத்தத் தொடங்கியதால், அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.
அதன்படி, சிறப்பு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து குடிபோதையில் இருந்த ஏஎஸ்பியை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஏ.எஸ்.பி குடிபோதையில் இருந்ததை புத்தளம் பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதையடுத்து, அது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த ஏஎஸ்பி போலீஸ் பணியில் இருந்து விரைவில் ஓய்வு பெற உள்ள ஒரு அதிகாரி. இந்த அதிகாரி தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.




