மட்டக்களப்பில் மண் அகழ்வதற்கான அனுமதி வழங்க கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவர் இன்று வியாழக்கிழமை (1) கல்லடி கடற்கரையில் மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலனறுவை பிரதேசத்தைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தம் செய்துவரும் கம்பனி ஒன்று மட்டக்களப்பு பொலனறுவை எல்லைப்பகுதியான பிரதேசத்தில் உள்ள பகுதியில் 63 ஆயிரம் கீப் ஆற்று மண் அகழ்வதற்காக அனுமதியைப் பெறுவதற்காக கம்பனி உரிமையாளர் இராஜாங்க அமைச்சரின் மண் அகழ்வுக்குப் பொறுப்பான இணைப்பாளரை நாடியுள்ளார்.
இணைப்பாளர் இது தொடர்பாக அமைச்சரின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து அதற்கான அனுமதியை அமைச்சரிடம் பெற்றுத்தருவதாகவும் அதற்கு 15 இலட்சம் ரூபா இலஞ்சமாக தருமாறும் கோரியுள்ளனர்.
இந்நிலையில் கட்டிட கம்பனி ஒப்பந்தக்காரர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினை நாடியதையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய ஆற்று மண் அனுமதிக்காக இலஞ்சம் கோரிய பணத்தை தருவதாக அமைச்சரின் இணைப்பாளர் மற்றும் செயலாளருக்கு அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலையில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப் பகுதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு அமைச்சரின் செயலாளர் மற்றும் இணைப்பாளர் இருவரும் வாகனம் ஒன்றில் வந்தடைந்து அங்;கு காத்திருந்த கட்டிட ஒப்பந்தக்காரரிடம் இலஞ்சம் கோரிய பணத்தை வாங்கும்போது அங்கு மாறு வேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் 15 இலட்சம் ரூபா பணத்தையும் கைப்பற்றினர்.



