பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆராய்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையின் பதிலை அறிவிப்பதற்கு இன்று (24) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அந்தத் தீர்மானத்தில் பல சட்டச் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்த பின்னர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள சட்ட சிக்கல்கள் தொடர்பில் அமைச்சரவையின் பதிலை எதிர்வரும் இரு தினங்களில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று பிற்பகல் அமைச்சரவைக்கு கிடைத்துள்ளதால், அது தொடர்பான சட்ட சிக்கல்களை முழுமையாக ஆய்வு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் இரண்டு தினங்களில் அமைச்சரவையின் பதிலை அறிவிப்பதே சிறந்தது என்பது அமைச்சரவையின் ஏகோபித்த தீர்மானம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.




