யாழ்ப்பாணம், நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையில் கருவுறு சிகிச்சைக்கு தேவையான ஸ்கானரை உபயோகப்படுத்துவது தொடர்பான செயலமர்வை நடத்த சில வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு வைத்தியத்துறையிலிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
யாழ் மாவட்டத்திலுள்ள அரச வைத்தியர்கள் சங்கத்தின் பல்வேறு கிளைகள் கூட்டாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
வெளிநாட்டில் பயிற்சிநெறியை முடித்துக் கொண்டு, அண்மையில் நாடு திரும்பிய வைத்தியர் ஒருவரை வளவாளராக கொண்டு, இந்த செயலமர்வு திட்டமிடப்பட்டுள்ளது.
முற்றிலும் வணிக நோக்கத்துடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த செயலமர்வு, அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்ட மக்களின் இலவச சுகாதார உரிமைக்கு வேட்டு வைக்கும், கருவுறு சிகிச்சை மாபியாவின் கூறுகள் இதில் தொடர்புபட்டுள்ளதாக வைத்தியத்துறைக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்த விமர்சனங்களுக்கு வலுச்சேர்க்கும் சில காரணங்களும் உள்ளன.
இந்த செயலமர்வில் அங்கம் வகிக்கவுள்ள ஒருவர், சில மாதங்களின் முன்னர் கிளிநொச்சியில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட வடமாகாண மகளிர் விசேட சிகிச்சை மையத்தில் கடமையாற்றுபவர். அங்கு தற்போது நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனையில் விளம்பரப்படுத்தப்படும் நவீன ஸ்கானர், செயற்கை முறை கருத்தரிப்புக்கான நவீன ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இப்படியான செயலமர்வை கிளிநொச்சி மகளிர் சிகிச்சை மையத்திலல்லவா நடத்தியிருக்க வேண்டும்.
நொதேர் சென்ரல் தனியார் மருத்துவமனையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள செயலமர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவத் துறையும் குறிப்பிட்டதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அரசின் இலவச கல்வியினால் பலனடைந்து வைத்தியர்களாகி, அரசு வழங்கும் இலவச மருத்துவ கட்டமைப்பில் மாதாந்த சம்பளம் பெறுபவர்களின் பொறுப்பான கடமையாக என்ன இருக்க வேண்டும்? மக்களிற்கான அந்த இலவச மருத்துவ உரிமையை உறுதி செய்யவல்லவா வேண்டும்.
ஆனால் அதை தவிர்த்து, வடக்கில் தற்போது, கருவுறு சிகிச்சை முழுவதும் வணிகமயப்பட்டு வருவதாக வைத்தித்துறைக்குள்ளேயே முணுமுணுப்புக்கள் எழ ஆரம்பித்துள்ளன.
இந்த பின்னணியில், நொதேர்ன் வைத்தியசாலையில் திட்டமிடப்பட்டுள்ள செயலமர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கடிதம் அனுப்பியுளள்னர்.
தொடர்புடைய செய்திகளுக்கு-




