தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான பிரதிநிதிகளுக்கும், புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்குமிடையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான சந்திப்பு ஒன்று இன்று (11) பிற்பகல் 1.00மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் கந்தரோடை இல்லத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட பிரதிநிதிகளும், புளொட் சார்பில் தலைவர் த.சித்தார்த்தனுடன் மத்தியகுழு உறுப்பினர் கௌதமன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஓன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பின்போது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக அதாவது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தங்களது கட்சி எடுத்துள்ள நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஆகவே அதிகாரப் பரவாக்கள் தொடர்பாக சரியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும்.
இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு முக்கிய காரணமாக தங்களது கட்சி செயற்பட்ட விடயத்தில் அதிருப்தி இருப்பதால் இவ்விடயத்தில் ஒரு சரியான நிலைப்பாட்டினை தங்கள் கட்சி எடுக்கின்ற பட்சத்தில் தமிழ் மக்களது மனநிலையில் மாற்றம் ஏற்படலாம்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளுமாக தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இப்போது சமூக மட்ட அமைப்புக்கள் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகி;ன்றன.. தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ஐந்து கட்சிகளுமாக நாங்கள் முழுமையாக அவருடனேயே இருப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் சந்திப்புக்களை மேற்கொள்வது என்று தெரிவிக்கப்பட்டது.



