வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் கொள்ளையர்களின் வாள்வெட்டு தாக்குதலில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (1) அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
கோழிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்த இந்த வர்த்தகரின் வீட்டுக்கு, நேற்று அதிகாலை 3 மணியளவில் வழக்கம் போல வாகனமொன்றில் கோழிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அவற்றை இறக்கிய பின்னர் வாகனம் புறப்பட்டதும், கதவுகளை பூட்டிவிட்டு வர்த்தகர் வீட்டுக்குள் சென்று விட்டார். வெளியே ஏதோ அசாதாரணமான சத்தம் கேட்டதையடுத்து, வர்த்தகர் வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது அவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் கூக்குரலிட்டதையடுத்து, அவரது மனைவி வெளியே வந்து பார்த்த போது, அவரிடமிருந்த தங்கச்சங்கிலியை கழற்றித்தருமாறும், இல்லையேல் அசிட் வீசுவோம் என்றும் கொள்ளையர்கள் மிரட்டினர்.
இதையடுத்து, மூன்றரை பவுண் தங்கச்சங்கிலியை அவர் கழற்றிக் கொடுத்தார்.
கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்கான வர்த்தகர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வல்வெட்டித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




