கடந்த 12ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஏற்றிச் சென்ற இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
குறித்த மீன்பிடி படகுகளில் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் மற்றும் 179 கிலோ 90 கிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 3798 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போதைப்பொருள்களுடன் இலங்கை மீன்பிடிக் கப்பல் ஒன்று ஆறு சந்தேக நபர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நான்கு சந்தேக நபர்களுடன் போதைப்பொருள் பரிமாற்றம் செய்ய வந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் மீன்பிடிக் கப்பலும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு கப்பல்களையும் இலங்கைக்கு தெற்கே உள்ள தேவந்தர முனையிலிருந்து சுமார் 133 கடல் மைல் தொலைவில் உள்ள காலி துறைமுகத்திற்கு கொண்டு வந்த பின்னர், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் கப்பல்கள் மற்றும் போதைப்பொருள் இருப்புக்கள் என்பன பரிசோதிக்கப்பட்டன.





