வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோயிலில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
19ஆம் திகதி அவர்கள் மீதான குற்றச்சாட்டை முன்வைக்குமாறும், அதை தொடர்ந்து தினசரி அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கோயிலிற்குள் நுழைந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று (12) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (12.) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றது. இதன்போது தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரின் அறிக்கையொன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ள பகுதி தொல்லியல் முக்கியத்துவம் உள்ள பகுதியென்றும், சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட போது அங்குள்ள தொல்பொருட் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைதனவர்கள் மீது தொல்லியல் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால். அவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தமது நீதிமன்றத்துக்கு இல்லையென தெரிவித்த நீதிபதி, கைதான 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
கைதானவர்கள் மீதான குற்றப்பத்திரத்தை எதிர்வரும் 19ஆம் திகதி கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதி பொலிசாருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். அன்றிலிருந்து தினசரி அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கின் முதலிரு சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மூன்றாவது சந்தேகநபர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஏனைய சட்டத்தரணிகள் சார்பில் க.சுகாஸ் ஆகியோர் முன்னிலையாகினர். இவர்களடன் பல இளநிலை சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.
கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டு, இன்றைய வழக்கு நடவடிக்கைகள் தொடர்பான நீதிமன்ற ஆவணத்தை சமர்பிக்குமாறு சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா கோரினார். இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
இன்றைய நீதிமன்ற கட்டளை மீதான மீளாய்வு மனுவை அடுத்த ஓரிரு நாட்களில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது.




