யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் வடிவேலு பாணியில் நூதனமாக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலிஸ் பிரிவில், நெல்லியடி பொதுச்சந்தைக்கு முன்புறமுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றிய அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத இளைஞனே திருட்டில் ஈடுபட்டுள்ளான்.
சில மாதங்களின் முன்னர் அந்த பகுதிக்கு வந்த இளைஞன், வர்த்தக நிலைய உரிமையாளருடன் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளான். அந்த பகுதியிலேயே சுற்றித்திரிந்ததால், வர்த்தக நிலையத்தில் உதவியாளராகவும் செயற்பட்டான்.
இதன்மூலம் அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் உள்ளவர்களுடனும் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளான்.
அருகிலுள்ள பலசரக்கு வர்த்தக நிலைய உரிமையாளரின் மகனிடம் சில தடவைகள் மேட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு அண்மையிலுள்ள இடங்களுக்கு சென்று வருவதுண்டு.
சில நாட்களின் முன்னரும், வழக்கம் போல வர்த்தக நிலைய உரிமையாளரின் மகனிடம் சென்று, அருகிலுள்ள சாப்பாட்டு கடைக்கு சென்று உணவருந்தி விட்டு வருவதாக குறிப்பிட்டு, மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்றுள்ளான்.
போன இளைஞன் அதன் பின்னர் திரும்பி வரவில்லை.
ஓரிரு நாட்களின் பின்னர் புதிய தொலைபேசி இலக்கமொன்றிலிருந்து அழைப்பேற்படுத்திய இளைஞன், மோட்டார் சைக்கிளை திருப்பி கொண்டு வந்து தருவதாக கூறியுள்ளார். ஆனால் மோட்டார் சைக்கிள் ஒப்படைக்கப்படவில்லை.
அந்த தொலைபேசியும் அணைக்கப்பட்டு விட்டது.
இது தொடர்பில் நெல்லியடி பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவான இளைஞன் பற்றிய எந்த தகவலும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இளைஞன் ஹற்றன் அல்லது நுவரெலியா மாவட்டத்தின் ஏதாவதொரு பகுதியை சேர்ந்தவராக இருக்கலாமென கருதப்படுகிறதே தவிர, பிறிதெரு தகவலும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
இளைஞன் தலைமறைவாகிய பின்னர் அழைப்பேற்படுத்திய தொலைபேசி இலக்கம், வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையிலும், பிற வழிகளிலும் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.