பல வருடங்களாக காதலித்த இளைஞன், கைகழுவ முயன்றதால் கோபமடைந்த காதலி, அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்து நடத்திய காதலி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
19 வயதுடைய காதலி கம்பளை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கம்பளையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 22 வயதுடைய இளைஞருடன் பல வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
வேறொரு பெண்ணில் ஈர்க்கப்பட்ட காதலன், இந்த யுவதியை கைகழுவி விட தீர்மானித்துள்ளார்.
சில நாட்களாக காதலன் தன்னை தவிர்ப்பதை அறிந்த இளம்பெண் இது குறித்து காதலனிடம் கேட்டுள்ளார்.
காதலன் தனது முடிவில் மாற்றமில்லையென கூறி விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த யுவதி, அவர் வேறு எந்த பெண்ணையும் காதலிக்கக் கூடாது என நினைத்து, தாங்கள் இருவரும் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த செயலால் ஆத்திரமடைந்த காதலன், அந்த புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் இருந்து நீக்குமாறு குறிப்பிட்டு காதலியை தாக்கியதாக தகவல் வெளியானது.
பின்னர் குறித்த காதலனை சந்திப்பதற்காக காதலியின் தாயும் சகோதரனும் கம்பளை பொதுச்சந்தைக்கு வந்துள்ளனர்.
அப்போது, காதலியின் சகோதரனை தாக்கிய காதலன், தாக்கப்பட்ட சகோதரனை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளார்.
எனினும் குறித்த இடத்தில் மறைந்திருந்த காதலி மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலனை பல தடவைகள் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது கடைக்கு அருகில் இருந்த பலர் இளம்பெண்ணை பிடித்து கட்டுப்படுத்தினர். கத்திக்குத்து தாக்கியதில் படுகாயம் அடைந்த காதலன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இளைஞனை தாக்கிய காதலி பின்னர் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.



