இலங்கை தமிழரசு கட்சி சட்டசிக்கலுக்குள் செல்வதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் கட்சி தலைவர் சிறிதரன் விரைந்து முடிவொன்றினை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அமைய இருக்கும் இராஜகோபுரத்திற்கான ஆரம்பபிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் பிற்போடப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்-
கட்சி பிரச்சினைகளை பொதுவெளிகளில் கதைப்பதற்கு உண்மையில் எனக்கு விருப்பம் இல்லை. அவ்வாறு பிரச்சினைகளை கையாள்வதற்கு கட்சியின் உயர்பீடங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இருந்தும் ஊடகங்கள் கேட்கின்ற கேள்விக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் நான் பதிலளிக்காமல் இருக்க முடியாது.
உண்மையில் எமது கட்சியின் செயற்குழு கூட்டம் 11திகதி நடைபெறவுள்ளதாக நான் ஊடகங்கள் வாயிலாகத்தான் அறிந்து கொண்டேன். இக் கூட்டம் தொடர்பில் எவ்விதமான உத்தியோக பூர்வ அழைப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
2024.01.26 திகதி நடைபெற்ற செயலாளர் தெரிவின் பின்னர் அவ் மாநாட்டை ஒத்தி வைத்தது தலைவர் சேனாதிராஜா அறிவித்திருந்தார். பின்னர் இவ் அறிப்பானது சட்ட ரீதியான அறிவிப்பா என ஆராய்ந்து பார்கின்ற போது புதிய தலைவரின் தலைமையில் கட்சியின் செயலாளர் அடங்கலாக ஏனைய செயற்குழு உறுப்பினர்களும் தெரிவாகிய பிற்பாடு மாநாட்டை பிற்போடும் அதிகாரம் பழைய தலைவருக்கு இல்லாமல் போகின்றது. இந்த சமயத்தில் கூட்டத்தினை கூட்டும் அதிகாரம் கலைக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு.
அன்று நடைபெற்ற கூட்டத்தினை சுமந்திரனே நடத்தினார் என குற்ற சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. அக்குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. காரணம் அவர் பதில் பொதுச் செயலாளர். இதன் காரணத்தினாலையே அவர் அக் கூட்டத்தை நடாத்தினார். இதனை நடத்திதருமாறு தலைவர் அவர்களே கூறியிருந்தார்.
மற்றும் நீதி மன்றத்தினை நாடவுள்ளதாக வெருட்டுவதாக பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இலங்கையில் உள்ள சட்ட ஒழுங்குகளின்படி கட்சி உயர்பீட உறுப்பினர்களாக இருக்கட்டும் ஆயுட் கால உறுப்பினர்களாக இருக்கட்டும் எவராக இருந்தாலும் கட்சி நடவடிக்கை தொடர்பில் நீதி மன்றங்களை நாடமுடியும். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.
எனவே கட்சியின் விசுவாசிகள், கட்சி மீது பற்று கொண்டவர்கள், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்கள் என்றதன் அடிப்படையில் கட்சிக்கொரு சட்டச் சிக்கல் வருகின்ற பொழுது அதனை தவிர்த்துக் கொள்ளும் வகையில் எங்களது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எனவே கட்சியின் மேற்படி நிலமையை கருத்திற் கொண்டு தலைவர் சிறிதரன் அவர்கள் விரைந்து முடிவொன்றினை எடுக்க வேண்டும். இவ்வாறாக இழுபறி நிலை தொடர்ந்தால் மக்கள் குழப்பம் அடைவார்கள் எமது கட்சியானது பாராம்பரிய கட்சியாகும். அவ்வாறானதொரு கட்சி வினைத்திறன் அற்று போவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
-பழுகாமம் நிருபர் –



