ரூ.45 கோடி சொத்துக்கு ஆசைப்பட்டு தன்னுடைய கணவனை, காதலன் துணையோடு கார் ஏற்றிக் கொலைசெய்த மனைவி, கைதுசெய்யப்பட்டார்.
திருமணம் தாண்டிய உறவுகள் பல நேரங்களில் விபரீதத்தில் முடிந்து விடுகின்றன. அது போன்ற ஒரு சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. கான்பூரில் வசிப்பவர் பிங்கி. இவரின் கணவர் ராஜேஷ் கவுதம். ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவருக்கு 45 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து இருக்கிறது.
ராஜேஷ் தனது வீடு கட்டுமானப் பணிகளுக்காக ஷைலேந்திர சோங்கர் என்பவரை தனது வீட்டுக்கு வரவழைத்திருந்தார். ஷைலேந்திர சோங்கர் அடிக்கடி கட்டுமானப் பணிக்காக ராஜேஷ் வீட்டுக்கு வந்து சென்றார். அவ்வாறு வந்து சென்றதில், அவருக்கு பிங்கியுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டதில் அவர்களுக்குள் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டது.
இதனால் பிங்கி அடிக்கடி தன்னுடைய கணவருடன் சண்டையிட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவுசெய்து, சாப்பாட்டில் விஷம் வைத்துக்கொடுத்தார்.
ஆனால் ராஜேஷ் அந்தச் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று, உயிர் பிழைத்துக் கொண்டார். அப்படியிருந்தும் பிங்கி தனது முயற்சியைக் கைவிடவில்லை. தன்னுடைய காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டினார். ராஜேஷ் தனது பெயரில் 3 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். எனவே விபத்தில் இறப்பது போன்று செய்து, இன்சூரன்ஸ் பணத்தையும் வாங்க பிங்கி திட்டமிட்டார்.
ராஜேஷ் வழக்கமாக தன்னுடைய மகனுடன் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். கொலை நடந்த அன்று, ராஜேஷ் தனியாக நடைபயிற்சி சென்றார். அவர் சாலையில் நடந்து சென்றபோது வேகமாக வந்த கார் ஒன்று, அவர்மீது மோதியதில் படுகாயமடைந்து, ராஜேஷ் உயிரிழந்தார். ஆரம்பத்தில் இதனை விபத்து மரணமாகவே போலீஸார் பதிவுசெய்தனர்.
ஆனால், ராஜேஷின் சகோதரர் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். தன்னை யாரோ பின்தொடர்வது போல உணர்வதாக ராஜேஷ் தனது சகோதரரிடம் கூறியிருக்கிறார்.
போலீஸார் இது தொடர்பில் விசாரித்ததில், சம்பவத்தின் சிசிரிவி காட்சியை பெற்றனர்.
ராஜேஷ் கௌதம் காலை 5.30 அளவில் நடைபயிற்சி சென்ற போது, நிமிடங்களுக்குப் பிறகு ஈகோ கார் அவரைப் பின்தொடர்கிறது. அதை ஓட்டிச் சென்ற சுமித் முன்னால் சென்று ராஜேஷை இந்த காரால் இடித்தான்.
ஆனால், அவரது கார் மின்கம்பத்தில் மோதியது. இதையடுத்து, காரை அங்கேயே விட்டுவிட்டு, சைலேந்திரா மற்றும் அவரது உறவினர் விகாஸ் சோங்கருடன் வேகன்ஆரில் தப்பிச் சென்றார். இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொலை மர்மம் நீங்கியது.
போலீஸாரின் விசாரணையில் ராஜேஷின் 9 வயது மகன் வாக்குமூலத்தாலும், பிங்கி சிக்கினார். ராஜேஷ் மகனிடம் விசாரித்தபோது, ‘சம்பவம் நடந்த அன்று நான் என்னுடைய தந்தையுடன் நடைபயிற்சிக்காக கிளம்பிக்கொண்டிருந்தேன். டிரஸ் அணிந்து வீட்டைவிட்டு வெளியில் வந்துவிட்டேன். அதன் பிறகு என்னுடைய தாயார் என்னை வீட்டுக்குள் வரும்படி அழைத்தார். நான் உள்ளே சென்றபோது, என்னை பாத்ரூமில் போட்டு அடைத்துவிட்டார். நான் அப்பாவுடன் போகவேண்டும் என்று சொன்னதற்கு, வீட்டிலிருந்து படி என்று கூறிவிட்டார்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து பிங்கியையும், அவரின் காதலரையும் போலீஸார் கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.




