பொய் வழக்குகள் சுமத்தி சிறையில் அடைத்து நீதித்துறையை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் தனது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்களிடமிருந்து ரூ.100 கோடி இழப்பீடு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உள்ளிட்டவர்களிடம் இந்த நட்டஈட்டை மீளப் பெற்றுத்தருமாறு அவர் கோரியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, பொலிஸ் பொறுப்பதிகாரி ஜகத் நிஷாந்த மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். .
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் ஊடாக, கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தமக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் விசாரணைகளை மேற்கொண்டதாக ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் மற்றும் மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய இந்த விசாரணை நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசாரணைகளின் போது, கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த ஆகியோர் தனக்கு எதிராக பொய்யான வாக்குமூலங்களை வழங்குமாறு பல்வேறு நபர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஷானி அபேசேகர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தான் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பல மாதங்களின் பின்னர் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், பிரதிவாதிகள் நீதித்துறை செயல்முறையை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் மற்றும் தீங்கிழைக்கும் வகையில்செயற்பட்டு, தனது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு, 100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஷானி அபேசேகர இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.




