ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) மறுத்துள்ளது.
சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு சட்டரீதியாக அந்தப் பதவிகளை வகிக்கும் தகுதி இல்லை என்றும், அவர்கள் அந்தப் பதவிகளை வகித்திருப்பது சட்டவிரோதமானது என்றும் கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அதன்படி வழக்கு தொடர்பான பதில்களை பெப்ரவரி 12ம் திகதி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எனவும், அவர்களால் நியமிக்கப்பட்ட வழக்குகள் இன்னமும் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் மனுதாரர் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பின் பிரகாரம் வேறொரு கட்சியில் அங்கம் வகிப்பவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமையை வைத்திருக்க முடியாது என டயானா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் வேறு கட்சியில் அங்கம் வகிக்கின்றனர் எனவும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாது எனவும், அவர்கள் கட்சியின் தலைமையில் செயற்பட இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் டயானா கமகே தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர், மாவட்ட நீதிபதி தனது முடிவுகளை அறிவித்தார் மற்றும் மனுதாரர் தனது புகாரின் மூலம் சில உண்மைகளை மறைக்க முயன்றதாகக் குறிப்பிட்டார்.
அதன் பிரகாரம் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் பணிபுரிவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்க மறுப்பதாக மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.




